Monday, January 27, 2014
நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள் மொத்தம் 9. அவர்களின் தன்மைகள் மற்றும் குணங்களை கீழே காணலாம்.
1.சூரியன்:-
எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!
சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார்,அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.
சூரியன் இயற்கையிலே பாப கிரகம் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார்.
உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே !!
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு கிரகங்கள் - சந்திரன் வியாழன் செவ்வாய்
பகை கிரகங்கள் - சுக்கிரன் சனி ராகு கேது
திசை காலம் - 6 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - சூரியனார் கோவில்.
2.சந்திரன்:-
'சந்த்ரமா மனஸோ ஜா' என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலையும் கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்றார்போல் பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுபபலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.
ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' என்ற பழமொழி உணர்த்துகிறுது!
கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!
நட்சத்திங்கள் - ரோகினி,அஸ்தம், திருவோணம்
நட்பு கிரகங்கள் - சூரியன், புதன்
பகை கிரகங்கள் - இராகு, கேது
திசை காலம் - 10 ஆண்டுகள்
கோச்சார காலம் - 2 1/4 நாள்
ஸ்தலம் - திருப்பதி
3.செவ்வாய்:-
செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும்.
ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய்.செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாய்யின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது.கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.
செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2,4,7,8,12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். 3,6,11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.
நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்
பகை - புதன், இராகு, கேது
திசைகாலம் - 7 ஆண்டுகள்
கோசார காலம் - 1 1/2 மாதம்
ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
4.புதன்:-
சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்களைப் பற்றி சோதிடத்தில் புதனை வைத்துதான் கணிக்கப்படுகிறது.
பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.
புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும்.விஷ்ணு இவருக்கு அதி தேவதை.புதனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. 1,4,7,10 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் வலிமையுடன் இருப்பார்.
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்பு கிரகங்கள் - சூரியன்
பகை கிரகங்கள் - சந்திரன்
திசைகாலம் - 17 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - திருவெண்காடு.
5.குரு:-
குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்று அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர்.குரு பார்க்க கோடி நன்மை !!!
புத்திரர்,நல்ல அறிவு,மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள்,தெய்வதரிசனம்,தீர்த்த யாத்திரை,சமுதாயத்தில் நல்ல மதிப்பு,சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.
இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.
நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகங்கள் - புதன், சுக்கிரன்
திசை காலம் - 16 வருடங்கள்
கோசார காலம் - 1 வருடம்
ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர்.
6.சுக்கிரன்:-
சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.
அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.
ஆபரணம், அணிமணி சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும். இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி கொண்டு வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. ஒரு ராசியில் 1 மாதம் சஞ்சாரம் செய்வார்.
நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
நட்பு கிரகங்கள் - புதன், சனி, இராகு, கேது
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன்
திசை காலம் - 20 வருடங்கள்
கோசார காலம் -1 மாதம்
ஸ்தலம் - கஞ்சனூர்
7.சனி:-
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே.
ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.வலிமை,ஆயுள்,அடிமை,எருமை,எண்ணெய்,கஞ்சத்தனம், கள்ளதனம்,மது,எள் தானியம்,இரும்பு,வாதம்,மரணம்,மருத்துவமனை,பயந்த கண்கள்,மனது வெறுக்ககூடிய செய்கை,இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவர்.ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவர். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவார்.சனிக்கு அதி தேவதை யமன். காகமே சனியின் வாகனம்.
இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்பு கிரகங்கள் - புதன், சுக்கிரன், இராகு, கேத
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - 2 1/2 வருடம்
ஸ்தலம் - திருநள்ளாறு
8.ராகு:-
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு,பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.
ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார்.சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார்.அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.ஸ்பெகுலேஷன்,சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.
விஷம்,மரணம்,பித்தம்,பேய் பிசாசு,மது குடித்தல்,திடீர் ஏற்றம்,திடீர் சரிவு,சிறைப்படல்,மாந்திரீகம்,பிறரை கெடுத்தல்,அன்னிய மொழி பேசுதல்,குஷ்டம்,வழக்குகள்,புத்திர தோஷம்,பித்ரு தோஷம்,விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.
நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன் , செவ்வாய்
திசைகாலம் - 18 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - திருநாகேஸ்வரம்.
9.கேது:-
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.
கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.
விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை.
நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்
நட்பு கிரகங்கள் - சனி , சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 7 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment