Layaalayam
Thursday, February 13, 2014
கேந்திராதிபத்திய தோஷம்
ஆனால் இவ்விடங்களுக்கு வரும் சனி,செவ்வாய், ராகு, கேது போன்ற பாவக் கிரகங்கள் தங்களது வெப்பக் கதிர்வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து இவ்விடங்கள் கொண்டிருக்கும் குளிர்ந்த கதிவீச்சால் தங்களது பாவத்தன்மையிலிருந்து விடுபடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட பாவம் ஜாதகருக்கு நற்பலனைத் தரும். இதனால்தான் பாவக் கிரகங்கள் கேந்திரத்தில் அமைவது விரும்பத்தக்கது.மேற்குறிப்பிட்ட கேந்திர பாவங்களுக்கு எதிர்மறையானது திரிகோண ஸ்தானங்கள் எனப்படும் 1,5,9 ஆம் பாவங்கள்.(லக்னம் எனப்படும் முதல் பாவம் கேந்திரம் மற்றும் திரிகோண இயல்புகள் இரண்டையுமே கொண்டிருக்கும் என்பதால் லக்னம் கேந்திரம் மற்றும் திரிகோணம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்படுகிறது). இவ்விடங்கள் இயல்பாகவே வெப்பக் கதிர் வீச்சுக்களைக் கொண்டிருக்கும் இவ்விடங்களில் அமையும் சுபக் கிரகங்கள் தங்களது குளிர்ந்த கதிர் வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து அவை இயல்பாகப் பெற்றிருக்கும் வெப்பக் கதிர் வீச்சால் தங்களது சுபாவத்திலிருந்து மாறுபடுகின்றன. இதனால் அக்குறிப்பிட்ட திரிகோண பாவமும் அதில் அமைந்த சுபக் கிரகமும் ஒரு ஜாதகருக்கு நன்மை செய்கின்றன.
சுபக்கிரகங்களான குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் புதன் ஆகியவை 1,4,7,10 ஆகிய கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும்போது அவை தனது சுபாவ குணத்தைவிட்டு அசுபத்தன்மை அடைகின்றன. சுபக்கிரகங்கள் அடையும் இந்த நிலையே கேந்திராதிபத்திய தோஷம் எனப்படுகிறது. கேந்திர ஸ்தானங்கள் அவற்றின் சொந்த வீடாக அமைந்தால் ஜாதகருக்கு கேந்திராதிபத்திய தோஷத்தின் கடுமை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக இருக்கும். அவற்றின் திசா புக்திகளில் அதன் தாக்கத்தை நன்கு அறியலாம்.
குருதான் கேந்திராதிபத்திய தோஷத்தில் அதிக கெடுபலனைத் தரக்கூடியவர். சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவை இதற்குப் பிறகு வரிசைக் கிரகமாக கெடுபலனைத் தருவர்.இந்தக் தோஷத்திலும் நுட்பமான சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக லக்ன கேந்திரத்தில் குருவுக்கு ஏற்படும் பலத்தினால் அது கெடுபலனைத் தராது. சில பாதிப்புகளைத் தந்தாலும் அது சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் வர்கோத்தமம் அடைந்த சுபக்கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தை உறுதியுடன் தரும். வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும். ராசி,மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்.லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்!. அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேஷ பலன்கள் உண்டு
உதாரண ஜாதாகம் :-
--------------------------------
இந்த ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகர் யார் என்று அனுமானிக்க முடியும்.
ஆம் !! ஜாதகி நமது மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
திருமணத்திற்கு காரகத்துவம் கொண்ட சுக்கிரன் உச்சம். ஆனால் அது கேந்திர ஸ்தானமாகிவிட்டது. உபய லக்னமான மிதுன லக்னத்திற்கு பாதக ஸ்தானமான கேந்திரத்தில் (7 ஆமிடத்தில்) குரு ஆட்சி. குருவும் சுக்கிரனும் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டுவிட்டன. கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என்றால் அவற்றின் காரகத்துவம், அவற்றின் சொந்த பாவங்கள் மற்றும் அவை ராசிக்கட்டத்தில் அமைந்த பாவங்களின் அடிப்படையில்தான் முதலில் பலனளிக்கும். மற்ற பிற காரணிகள் பிறகுதான் பாதிக்கும். அதனடிப்படையில் குரு காரகத்தினடிப்படையில் குடும்பத்தையும் பாவத்தினடிப்படையில் களத்திர,தொழில் ஸ்தானங்களை கட்டுப்படுத்துகிறார்.
1.ஒரு கிரகம் தனது தோஷமான அமைப்பினால் ஜாதகருக்கு மிகக் கடுமை காட்டும்போது தனது காரகங்களில் ஒன்றை ஜாதகருக்கு முழுமையாக மறுத்துவிடும். பிறகு அக்கிரகம் தொடர்புடைய பிற விஷயங்களில் பாதிப்பைத் தராது.
2.ஒரு கிரகம் ஜாதகருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அளப்பரிய நன்மையை செய்ய வேண்டிய சூழலில் அதன் காரகங்களில் ஒன்றை முழுமையாக கைவிட்ட பின்னரே அளப்பரிய அந்த நன்மையை வழங்கும்.
மேற்சொன்ன இரு விதிகளும் குறிப்பிட்ட கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தில் இல்லாமல் இருந்தாலும் செயல்படும்.இதன் பின்னணியை ஆராய்ந்தால் மனித வாழ்வின் சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட கிரகம் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது புலப்படும்.
இந்த ஜாதகத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆளான இரு கிரகங்கள் குரு மற்றும் சுக்கிரன் ஆவர். மேற்சொன்ன விதியினடிப்படையில் பார்த்தால் குரு அதன் காரகத்தில் ஒன்றான குடும்ப வாழ்வை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார்.இதற்கு குடும்ப பாவத்தில் வக்ரகதியில் நின்ற சனியும் துணை புரிகிறார்.ஆனால் ராஜ்யஸ்தானமான தனது பத்தாவது பாவத்தின் அடிப்படையில் ஜாதகிக்கு ராஜ்ய பரிபாலனம் செய்ய வைக்கிறார். 10 ஆவது பாவத்தில் ஒரு உச்சக் கிரகம் (சுக்கிரன்) இருப்பதால் 10 ஆவது பாவத்தின் பலனை மிக உயர்வாகத் தர வேண்டிய நிலையில் குரு இருக்கிறார்.
கேந்திராதிபத்திய தோஷத்தில் இருக்கும் மற்றொரு சுபக்கிரகம் சுக்கிரன்.அதனால் தனது காரகங்களில் ஒன்றான இல்லற இன்பத்தை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார். ஆனால் ராஜ்யஸ்தானமான 10 ஆவது பாவத்தில் உச்ச கதியில் அமர்ந்ததால் சுக்கிரனும் ஜாதகிக்கு ராஜ்ய பரிபாலனம் செய்ய முழுமையாக உறுதுணை புரிகிறார். சுக்கிரன் அரசியலுக்கு உரிய கிரகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால் இதைப் பெற ஜாதகி இழந்தது மனிதனை முழுமைப்படுத்தும் குடும்ப வாழ்வை.சுக்கிரனுக்கு மீனம் சொந்த வீடாக இல்லாவிட்டாலும் சுபக்கிரகம் கேந்திரத்தில் உச்சகதியில் அமைந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்தை தர வேண்டியவராகிறார்.
Monday, February 3, 2014
கால சர்ப்ப தோஷம்
இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில் மற்ற நல்ல யோகங்கள் எதுவும் இல்லை எனில் ஜாதகர் வேலை இன்றி திரிவார்.திருமண வாழ்க்கை அமையாது. பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வார்.பொதுவாக அனைத்து கிரகங்களும் கடிகார சுற்றின் படியே இயங்கும். ஆனால் ராகு, கேது கடிகார சுற்றின் எதிர் திசையில் இயங்கும். கால சர்ப்ப தோஷத்தில் இருக்கும் நபர் தன் வாழ் நாளில் 32 வயதிற்கு பிறகே அனைத்து யோகங்களையும் பெறுவார்.
கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரங்கள்:
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை,சுவாதி,சதயம் போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அல்லது ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் குறையும்.
மேலும் காளகஸ்தி,ராமேஸ்வரம் சென்றும் வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்யலாம்.
கால சர்ப்ப யோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் இசை ஞானி இளையராஜா.
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காமே காத்திருக்கேன் கை பிடிக்க வருவாரோ..
அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே !!!
என்ற பாடல் முதல் இன்று வரை நம் செவிக்கு இசை விருந்து படைத்துக் கொண்டிருப்பவர்.கலை மகளின் இசை வாரிசு இவர்.அன்பு,பாசம், பிரிவு,சோகம்,அமைதி போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் நம் மனதிற்கு உணர்த்தியது இவருடைய இசை தான்!!!. அனைவரின் இதயத்திற்கும் மிக நெருக்கமான பாடல்களில் முதலிடம் பிடிப்பது இசை ஞானியின் இசைத் தென்றலே!!. அவரின் பாடல்களை இரவினில் கேட்டு ரசித்தால் மனதிற்கு ஒருவித அமைதி மற்றும் நிறைவு கிட்டும். அந்த சுகத்தை எழுத்துக்களில் விவரிக்க இயலாது. உணர்ந்து மட்டுமே அறிய முடியும்.
இசை ஞானியின் இசையில் எவ்வளவோ அற்புதமான பாடல்கள் அரங்கேறியுள்ளன.அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது "சின்ன தாயவள்" from தளபதி.இந்தப் பாடலுக்கு மனதை பறி கொடுக்காதவர் இல்லை நம் மண்ணில்.இந்த பாடலில் இழைந்தோடும் ஒரு தனித்த புல்லாங்குழலின் ஓசை அந்தத் தாயின் வேதனையை நம் மனதிற்கு உணர்த்தும்.பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் கண்கள் பனிக்கும், இதயம் கனக்கும்.உலகில் எங்கிருந்தாலும் நமது தாயின் மடியை தேடச் சொல்லும்.
"புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்" இந்த பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்கும் அன்றுதான் புதிதாய் பிறந்த எண்ணம் தோன்றும்!! இன்னும் எத்தனையோ ஆயிரம் பாடல்கள்.அவற்றின் சிறப்பை எழுதிக்கொண்டே போகலாம்.. வாழ்க இசை ஞானி !! வளர்க அவரது இசைப் பயணம் !!
இசை ஞானியின் ஜாதகம்
பிறந்த தேதி : 2-ஜூன்-1943
பிறந்த நேரம் : 6.40 am
கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி
இவர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருக்கின்றன. 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர்.
இந்த ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் லக்கினத்தில்.மற்றும் ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன்(9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார்.அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார்.இந்த அமைப்பு இசை ஞானிக்கு மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்தது.மேலும் இந்த அமைப்பு அவருடைய தொழிலில் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி,சந்திரன் உச்சம் பெற்றதுடன்,அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து,அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.
தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால்,அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது.சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் பெரும்பாலும் கலைத் துறையில் தான் ஈடுபடுவார்கள்.இவர்களுடன் குருவும் சேர்ந்ததால்,அவர் இசைக் கலைஞரானார்.பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5ஆம் இட அதிபதி) லக்கினத்தில் அமர்ந்ததால்,பூர்வ புண்ணியமாக அவருக்கு கர்நாடக இசை,கிராமத்து இசை,மேற்கத்திய இசை என்று பலதரப்பட்ட இசைகளும் வசப்பட்டன!!
நான்காம் வீட்டில் மாந்தி அமர்ந்து ,அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணத்தில் இருப்பது எளிமையான வாழ்கையில் ஈடுபாடு கொடுக்கும். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த மாந்தி கொடுத்த எளிமையும் ஒரு காரணம்!
ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா !!
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இவர் ராஜா தான் !!!
Friday, January 31, 2014
காவியத்தாயின் இளைய மகன் - கவியரசு கண்ணதாசன் ஜாதகம் !!!
தமிழராகிய நமக்கு கவியரசு கண்ணதாசன் பற்றி அறிமுகம் தேவை இல்லை.தமிழர்களுக்கு,தமிழ் மொழிக்கு, பெருமை சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அவர்!. கலைமகள் சரஸ்வதி இந்த மாமேதையின் நாவில் குடி இருந்தாள். பள்ளிப் படிப்பை காட்டிலும் அவருக்கு வாழ்க்கை தந்த அனுபவ பாடங்களே அதிகம்!!!. அந்த அனுபவங்கள் தான் அவருடைய பாடல்களில் எதிரொலிக்கும்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கர்வத்தோடு பாடியவர்.இது அவரின் தலைக்கனம் அல்ல. தமிழ்க்கனம். தன் படைப்புகளுக்கு என்றும் மரணமில்லை என்று அந்த அதிசயக்கவி தீட்டிய அர்த்த சாசனம் !!
தனது வாழ்க்கைப் பயணத்தை எந்த வித ஒளிவு மறைவுமின்றி அவரே சுயசரிதமாக புத்தக வடிவில் எழுதியுள்ளார்.நான் படித்ததில் மிகவும் அருமையான புத்தகங்கள்.அவைகள்
வனவாசம் - கவிஞரின் அரசியல் வாழ்க்கை சரிதம்.
மனவாசம் - “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என்று
தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்ன கவிஞரின் சுய சரிதம்.
அர்த்தமுள்ள இந்து மதம் - ஆன்மீகப் புத்தகம்
எனக்கு அவரின் தத்துவ பாடல்களின் மேல் அலாதி பிரியம். ஒரு மனிதன் தன் வாழ்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எப்படி பார்க்க வேண்டும் என்பது அவரது தத்துவப் பாடல் வரிகளின் சிறப்பு. மனதை தொட்ட அவரின் தத்துவ வரிகளில் சில,
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.மனிதனின் கவலைகளை மறக்கக் செய்வது அவருடைய எழுத்துக்கள்தான்!. இந்த உலக வாழ்க்கை எனும் மயக்கத்தை தெளிய வைப்பவை கவியரசரின் அற்புத பாடல்கள் மற்றும் எழுத்துக்கள். வாழ்க கவிஞரின் புகழ் !! வளர்க அவர் நம்மிடம் விட்டு சென்ற நினைவுகள் !!!
அவருடைய ஜாதக ஆய்வு மற்றும் பலன்கள் பின்வருமாறு,
பிறந்த தேதி : 24-6-1927.
பிறந்த நேரம் : 11 am
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம்.
சிம்ம லக்கினகார்கள் பெரும்பாலும் சினிமா துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கன்று. லக்கின நாதன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பது நல்லது. அதை விட நல்லது 11ல் இருப்பது.லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில், அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமானவர்.
இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். மேலும் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த கவிஞரானார்.இரண்டு, பதினொன்றாம் அதிபதியான புதன் மாந்தியுடன் சேர்ந்து 12ல் அமர்ந்ததால் பல படங்கள் எடுத்து பலவிதத்தில் பொருள் இழப்பு ஏற்பட்டது.
சிம்ம லக்கினத்திற்கு கடும் பகையான சனி 4ல் அமர்ந்து படிப்பைக் கெடுத்தது. இதனால் தான் அவர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.ஆயுள்காரகன் சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்குக் கிடைக்காததால் அவர் 54 வயதில் காலமானார்.
புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.புதன் சுக்கிரன் கூட்டாக அமைய பெற்றதும் கற்பனைகளுக்கு உரிய கிரகமான சந்திரன் திரிகோணமான 9ல் இருக்கிறார். இதனால் தான் அவர் கவிதைகள் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.12ல் நீசமான செவ்வாயினால் இவருக்கு சம்பாதித்த அளவிற்கு சொத்துகள் ஏதும் அமையவில்லை.
கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்! ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவரை ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கியது. எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடைய பல பாடல்களை எழுத வைத்தது.
பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால் "காதல் பெண்களின் பெருந்தலைவன்” என்று பல பெண்கள் சகவாசத்துடன் வாழ வைத்தது.11ல் இருக்கும் ராகு, அதன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனது. அவரை அரசவை கவிஞராகவும் ஆக்கியது.
சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், அபாரமான சுய சிந்தனைகள் மற்றும் தனித்து இயங்கும் தன்மை வாய்க்க பெரும். கவிஞரும் இப்படியே வாழ்ந்தார்.லக்கினாதிபதி 11ல் வலுவாக அமர்ந்து 5ஆம் வீட்டைப் பார்வையில் வைத்துள்ளார். குழந்தைக்குக் காரகன் குரு ஆட்சி பலத்துடன் இருக்கிறார்.அதனால் அவருக்கு நிறைய (மொத்தம் 13) குழந்தைகள் இருந்தார்கள்!!!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !!!
Monday, January 27, 2014
நட்சத்திரங்களும், ராசிகளும்
ராசிகள் ----------- நட்சத்திரங்கள்
மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
மேஷம், சிம்மம் ,தனுசு - நெருப்பு ராசிகள்
ரிஷபம், கன்னி , மகரம் - நிலம் ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் - காற்று ராசிகள்
கடகம் , விருச்சிகம், மீனம் - நீர் ராசிகள்.
மேஷம்,கடகம்,துலாம், மகரம் - சர ராசிகள்
ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் - ஸ்திர ராசிகள்
மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் - உபய ராசிகள்
நட்சத்திர அதிபதிகள்:-
--------------------
கேது - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,
சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி
ராசி அதிபதிகள் :
----------------
ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ,அதுவே அவர்களுக்கு வீடுகள். ஒவ்வொரு ராசியின் அதிபதிகள் பின்வருமாறு,
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு
இதைப்போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நவகிரகம் உச்சம் பெரும். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு,
மேஷத்தில் சூரியன் உச்சம் பெரும்
ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெரும்
மிதுனத்தில் உச்சம் இல்லை
கடகத்தில் குரு உச்சம் பெரும்
சிம்மத்தில் உச்சம் இல்லை
கன்னியில் புதன் உச்சம் பெரும்
துலாத்தில் சனி உச்சம் பெரும்
விருச்சிகத்தில் ராகு,கேது உச்சம் பெரும்
தனுசில் உச்சம் இல்லை
மகரத்தில் செவ்வாய் உச்சம் பெரும்
கும்பத்தில் உச்சம் இல்லை
மீனத்தில் குரு உச்சம் பெரும்
12 ராசிகளும் அவர்களின் குணங்களும்
மேஷம் - முன் கோபம் நிறைந்தவர்களாகவும்,எதிலும் முன்னணியில் இருக்கவும் விரும்புபவர்கள்
ரிஷபம் - வேடிக்கையாக பேசும் குணம் கொண்டவர்கள்
மிதுனம் - சாமர்த்தியமாக பேசும் தன்மை கொண்டவர்கள்
கடகம் - பேச்சு திறமையால் காரியத்தை சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்
சிம்மம் - மன தைரியம் அதிகம் கொண்டவர்கள்
கன்னி - அன்பான பேச்சால் பிறரை கவருபவர்கள்
துலாம் - சொந்தம் மற்றும் உறவினர்களோடு வாழ விரும்புபவர்கள்
விருச்சிகம் - எதையும் கண்டு அஞ்சாதவர்கள்
தனுசு - பெரியவர்களிடம் நன்மதிப்பும் பக்தியும் கொண்டவர்கள்
மகரம் - நல்ல செல்வாக்கு,கீர்த்தி பெற்றவர்கள்
கும்பம் - தன் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள்
மீனம் - எந்த பிரச்சனையிலும் சிக்காமல் நழுவிவிடும் குணம் உள்ளவர்கள்
நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள் மொத்தம் 9. அவர்களின் தன்மைகள் மற்றும் குணங்களை கீழே காணலாம்.
1.சூரியன்:-
எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!
சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார்,அரசாங்க பதவி ஆத்மபலன் தகப்பனாரிடம் உடன் பிறந்தவர்கள் ஆகியவற்றை ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.
சூரியன் இயற்கையிலே பாப கிரகம் என்பதால் பாப பலன்களை தருவார். சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பார். ஐந்தாம் வீட்டில் இருந்தால் கடுமையான் புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திர வழியில் தோஷத்தை ஏற்படுத்துவார்.
உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே !!
நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
நட்பு கிரகங்கள் - சந்திரன் வியாழன் செவ்வாய்
பகை கிரகங்கள் - சுக்கிரன் சனி ராகு கேது
திசை காலம் - 6 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - சூரியனார் கோவில்.
2.சந்திரன்:-
'சந்த்ரமா மனஸோ ஜா' என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலையும் கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்றார்போல் பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுபபலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.
ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' என்ற பழமொழி உணர்த்துகிறுது!
கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!
நட்சத்திங்கள் - ரோகினி,அஸ்தம், திருவோணம்
நட்பு கிரகங்கள் - சூரியன், புதன்
பகை கிரகங்கள் - இராகு, கேது
திசை காலம் - 10 ஆண்டுகள்
கோச்சார காலம் - 2 1/4 நாள்
ஸ்தலம் - திருப்பதி
3.செவ்வாய்:-
செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும்.
ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய்.செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாய்யின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது.கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.
செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2,4,7,8,12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். 3,6,11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.
நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்
பகை - புதன், இராகு, கேது
திசைகாலம் - 7 ஆண்டுகள்
கோசார காலம் - 1 1/2 மாதம்
ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
4.புதன்:-
சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்களைப் பற்றி சோதிடத்தில் புதனை வைத்துதான் கணிக்கப்படுகிறது.
பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.
புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும்.விஷ்ணு இவருக்கு அதி தேவதை.புதனுக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. 1,4,7,10 ஆகிய வீடுகளில் புதன் இருந்தால் வலிமையுடன் இருப்பார்.
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்பு கிரகங்கள் - சூரியன்
பகை கிரகங்கள் - சந்திரன்
திசைகாலம் - 17 ஆண்டுகள்
கோசார காலம் - 1 மாதம்
ஸ்தலம் - திருவெண்காடு.
5.குரு:-
குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்று அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர்.குரு பார்க்க கோடி நன்மை !!!
புத்திரர்,நல்ல அறிவு,மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள்,தெய்வதரிசனம்,தீர்த்த யாத்திரை,சமுதாயத்தில் நல்ல மதிப்பு,சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.
இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.
நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகங்கள் - புதன், சுக்கிரன்
திசை காலம் - 16 வருடங்கள்
கோசார காலம் - 1 வருடம்
ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர்.
6.சுக்கிரன்:-
சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.
அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.
ஆபரணம், அணிமணி சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும். இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி கொண்டு வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. ஒரு ராசியில் 1 மாதம் சஞ்சாரம் செய்வார்.
நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
நட்பு கிரகங்கள் - புதன், சனி, இராகு, கேது
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன்
திசை காலம் - 20 வருடங்கள்
கோசார காலம் -1 மாதம்
ஸ்தலம் - கஞ்சனூர்
7.சனி:-
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே.
ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்க்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே.வலிமை,ஆயுள்,அடிமை,எருமை,எண்ணெய்,கஞ்சத்தனம், கள்ளதனம்,மது,எள் தானியம்,இரும்பு,வாதம்,மரணம்,மருத்துவமனை,பயந்த கண்கள்,மனது வெறுக்ககூடிய செய்கை,இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவர்.ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவர். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவார்.சனிக்கு அதி தேவதை யமன். காகமே சனியின் வாகனம்.
இவருக்கு 3,7,10 ஆகிய பார்வைகள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் தங்கி செல்வார்.
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்பு கிரகங்கள் - புதன், சுக்கிரன், இராகு, கேத
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - 2 1/2 வருடம்
ஸ்தலம் - திருநள்ளாறு
8.ராகு:-
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு,பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.
ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார்.சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார்.அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.ஸ்பெகுலேஷன்,சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.
விஷம்,மரணம்,பித்தம்,பேய் பிசாசு,மது குடித்தல்,திடீர் ஏற்றம்,திடீர் சரிவு,சிறைப்படல்,மாந்திரீகம்,பிறரை கெடுத்தல்,அன்னிய மொழி பேசுதல்,குஷ்டம்,வழக்குகள்,புத்திர தோஷம்,பித்ரு தோஷம்,விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.
நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன் , செவ்வாய்
திசைகாலம் - 18 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - திருநாகேஸ்வரம்.
9.கேது:-
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.
கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.
விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை.
நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்
நட்பு கிரகங்கள் - சனி , சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
திசை காலம் - 7 வருடங்கள்
கோசார காலம் - 1 1/2 வருடம்
ஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம்.